Tuesday, June 20, 2017

அரங்கம் என்னும் ஊர் - Part 3

ஐயப்பாடு அறுத்து, ஆதரம் பெருகின பின் .....

திருநெடுந்தாண்டகம் - 23

உள்ளூறும் சிந்தை நோய் எனக்கே தந்து என் ஒளி வளையும் மாநிறமும் கொண்டார் இங்கே
தெள்ளூறும்  இளந்தெங்கின் தேறல் மாந்திச் சேலுகளும் திருவரங்கம் நம்மூர் என்ன
கள்ளூறும் பைந்துழாய் மாலையானை கனவிடத்தில் யான் காண்பன் கண்டபோது
புள்ளூறும் கள்வா நீ போகேல் என்பன் என்றாலும் இது நமக்கோர் புலவி தானே !!

நித்ய விபூதி லீலா விபூதி என்று எல்லா செல்வங்களையும் உடைய எம்பெருமான் உன்னை (பரகால நாயகியை) கண்டபின் தந்த பரிசு என்ன?

உள்ளூறும் சிந்தை நோய் - நோய் , உடலில் இல்லாத சிந்தை நோய், ஓரிடத்தில் நிற்காமல் பரவும் - ஊரும் சிந்தை நோய், வெளியே தெரியாது உள்ளே இருக்கும் நோய்  - இது தான் அவன் கொடுத்த பரிசு. அவனைப் பிரிந்தால் இப்படி தவிக்கும் பக்தியாகிய பரிசு.

அதோடு  நிற்காமல் "என் ஒளிவளையும் மாநிறமும் கொண்டார்". என்னிடம் அவன் விரும்பியவற்றை எல்லாம் எடுத்து கொண்டு போனான். "உன்னுடைய வளை உன்னுடன் சேர்ந்திருக்கும் போது எவ்வளவு அழகுடையது? உன்நிறம் எவ்வளவு இனிமையானது?" என்று அவற்றை எல்லாம் எடுத்து கொண்டு போய் விட்டான்.

அவன் விரும்பியதாலே இவற்றை "என்னுடையவை" என்கிறாள் பரகால நாயகி.

அப்படி எல்லாவற்றையும் கொண்டு சென்றவன் "எந்த ஊர் என்றாவது கேட்டாயா?" என்று தோழி கேட்க "நான் கேட்பதற்கு முன்னமே அவனே சொன்னான்"

கள்ளூறும் இளந்தெங்கின் தேறல் மாந்திச்  சேலுகளும் திருவரங்கம் நம்மூர்"  - காவிரி ஆற்றில் இருக்கும் மீன்கள் திருவரங்கச் சுனைகளில் சென்று, அங்கு இளம் தென்னைகள் இருந்து சொரியும் கள்ளை பருகி இனிமையாக அங்கேயே வசிக்கும் - சம்சார மண்டலத்தில் இருந்து பரமபதம் செல்லும் முக்தர்கள், இங்கே இருந்த வாசனையே இல்லாமல் எம்பெருமானை அனுபவிப்பது போல்

நம்மூர்  - இது நம்மூர் என்கிறார்கள்.

நம்மூர்  - நமக்கு தேசம் - எல்லாம் தன் பக்தர்களுக்கு என்றிருப்பவனுக்கு எம்மூர் என்றால் இனிக்காது. பரகால நாயகிக்காக உம்மூர் என்றால் அவளுக்கு இனிக்காது.

நாம் இருவருக்கும்   - என்னை காதலனாகவும், உன்னை காதலியாகவும் ஆக்கும் ஊர் நம்மூர்

அரங்கம் என்னும் ஊர் - நம்மூர்!


No comments:

Post a Comment