Sunday, June 18, 2017

அரங்கம் என்னும் ஊர் - Part 2

Context 2

திருமாலை - 16

சூதனாய்க் கள்வனாகி தூர்த்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயற்கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
போதரே என்று சொல்லி என் புந்தியில் புகுந்து  - தன் பால்
ஆதரம் பெருக வைத்த அழகனூர் அரங்கமன்றே!

சூது - பார்த்துக்கொண்டிருக்கும் போதே ஒருவர் பொருளை அபகரிப்பது
களவு - பிறர் பொருளை தன்னுடையது என்று நினைப்பது

இங்கு எம்பெருமானுடைய சொத்தான ஆத்மாவை தன்னுடையது என்று நினைக்கும் கொடிய செயல்  - களவு

எம்பெருமானே சுவாமி, நாம் அடிமை என்ற நினைப்பெல்லாம் பொய் என்று மயக்கி, மற்றவரை தன்னை போலே நாஸ்திகராய் மாற்றுவது -  சூது (இது இன்றைய காலகட்டத்தில் மிகவும் பொருந்தி இருப்பது). Irrespective of beliefs and principles, objective seems to be to destroy faith!!

திருடப்பட்ட பொருளின் மதிப்பினாலும், திருடப்பட்டவரின் மேன்மையினாலும் பாபமும், தண்டனையும் அதிகரிக்கும். சுள்ளிகளை திருடுவதைவிட, தங்கத்தை திருடுவது அதிக தண்டனை பெற்றுத் தரும். ஒரு சாமான்யனிடம் திருடுவதைவிட அரசனிடம் திருடுவது அதிக தண்டனை பெற்றுத் தரும்.

இங்கே மிக உயர்ந்த வஸ்துவான ஆத்மாவை, சர்வேஸ்வரனான எம்பெருமானிடம் இருந்து திருடினால்....அதை விட கொடியது வேறெதுவும் இல்லை.

மாதரார் கயற்கண் என்னும் வலையுள்பட்டு அழுந்துவேனை - வலையில் மாட்டும் பிராணியை போல், பெண்களின் கண்களில் அகப்பட்டு, மீளமுடியாமல் இருக்கும் என்னை  - இது தாழ்ந்தது என்று விவேகம் அற்று இருக்கும் என்னை பெரிய பெருமாள் மீட்டார்.

எப்படி?

போதரே என்று சொல்லி என் புந்தியில் புகுந்து  - 

ஆழ்வீர் - நீர் எதை ஆசைப்பட்டு இதில் அழுந்தி இருக்கிறீர் என்று பெரிய பெருமாள் கேட்க , "என் ரசிக தன்மையால், நான் கண்ணழிகில் அகப்பட்டு இருக்கிறேன்" என்ன , "நம் கண்ணழகை காட்டி இவரை மீட்போம்" என்று திரையை விலக்கி தன் கண்ணழகை காட்டி நெஞ்சில் புகுந்து  திருத்திக் கொண்டார்!

உயிர்க்கெல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக்கண்ணன்  - பெரிய திருமொழி 7-1-9

தன் பால் ஆதரம் பெருக வைத்த - மற்ற விஷயங்களில் இருந்த பற்றை அறுத்து , எம்பெருமான் பக்கலில் அன்பு செலுத்தும்படி செய்தான் 

எதைக்காட்டி செய்தான்?

அழகனூர் - தன் திருமேனி அழகை காட்டிச் செய்தான் 

இவருடைய ஐயங்களை அறுத்து, அன்பை வளர்க்க தன் அழகாலேயே செய்து முடித்தான் எம்பெருமான்.

அந்த அழகை காட்டி இவரை திருத்த, தகுந்த சமயத்தை பார்த்து எப்போதும் இருக்கும் இடம் - ஊர்  - அரங்கமன்றே!

சம்சாரிகளுக்கு ருசி பிறக்கும் போது அனுபவிக்க சரியாக இருக்கும் இடம் - ஊர் - அரங்கம் !

அரங்கம் என்னும் ஊர்!

1 comment:

  1. நெடுங்கயிறு வலை நினை

    ReplyDelete